Last Updated : 28 Dec, 2019 08:50 PM

 

Published : 28 Dec 2019 08:50 PM
Last Updated : 28 Dec 2019 08:50 PM

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல்: 10,000 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது மத்திய பாதுகாப்பு படை

உபியின் அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்தில் கடந்த டிசம்பர் 15 இல் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 10,000 மாணவர்கள் மீது மத்திய பாதுகாப்பு படையான ‘ரேப்பிட் ஆக்‌ஷன் போர்ஸ்(ஆர்ஏஎப்)’ கமாண்டர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஜாமியா நகரில் டிசம்பர் 15 இல் போராட்டம் நடைபெற்றது. இதில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழகத்தினுள் அத்துமீறி நுழைந்த டெல்லி போலீஸார் கண்மூடித்தனமாக நடத்தி தாக்குதல் கண்டனத்திற்கு உள்ளானது.

இதை கண்டித்து அதே தினம் இரவு அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்தின் மாணவர்கள் தம் வளாகத்தினுள் போராட்டம் நடத்தினர். இதில், உபி போலீஸ் மற்றும் ஆர்ஏஎப் மத்திய பாதுகாப்பு படையினர் இடையே மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டது.

இதனால், பல்கலைழகத்தின் பதிவாளர் அப்துல் ஹமீது அனுமதியுடன் வளாகத்தின் உள்ளே நுழைந்த உபி போலீஸ், ஆர்ஏஎப் படையினர் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் மீது விடுதியில் புகுந்து கண்ணீர்புகை, ரப்பர் மற்றும் துப்பாக்கி குண்டுகளை பொழிந்தது.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். ஆர்ஏஎப்பின் கமாண்டர் புனித் கவுல்தார், துணை கமாண்டர் காசிம் பையூம், ஆய்வாளர்களான நீரஜ் தாமா. உதவி ஆய்வாளர்கள் ஜே.டி.அன்சாரி, சரண்சிங், அர்விந்த் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். இதை எதிர்த்து இன்று அலிகர் காவல் நிலையத்தில் ஆர் ஏ எப் கமாண்டர் சார்பில் பெயர் தெரியாத 10,000 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

தனது புகாரில் கமாண்டர் ஆர்ஏஎப்பின் இரண்டு வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனம் மற்றும் இருபேருந்துகள் சேதம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு பின் பதிவான இந்த வழக்கிற்கு அலிகர் முஸ்லிம் பல்கலைழக பேராசிரியர்கள் சங்கம்(அமுட்டா) கண்டித்துள்ளது.

இது குறித்து அமுட்டாவின் செயலாளர் டாக்டர்.நஜ்முல் இஸ்லாம் விடுத்த அறிக்கையில் கூறும்போது, ‘தனது தவறுகளை மறைக்க வேண்டி அப்பாவி மாணவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோல், பழிவாங்கும் நடவடிக்கையை தவிர்த்து மத்திய பாதுகாப்பு படையினர் பொதுமக்களின் நம்பிக்கையை பெறும் செயலில் இறங்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டிசம்பர் 15 கலவரத்தில் இதே புகாரில் உ.பி. போலீஸாரும் 1200 மாணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலிகர் போலீஸார் 26 மாணவர்களை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். இந்த வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தி பல்கலை தரப்பினர் மற்றும் அப்பகுதியின் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x