Last Updated : 28 Dec, 2019 06:11 PM

 

Published : 28 Dec 2019 06:11 PM
Last Updated : 28 Dec 2019 06:11 PM

''ராகுல் காந்தி மீண்டும் தலைமை ஏற்க வேண்டும்'' - மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை

ராகுல் மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மே 25 அன்று நடந்த 17-வது மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது ராகுல் காந்தி தலைமைப் பதவியில் இருந்து விலகினார்.

பதவியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் தலைவர்கள் ஒருமனதாக நிராகரித்தனர். ஆனால் ராகுல் காந்தி பிடிவாதமாக இருந்து காங்கிரஸ் தோல்வி ஏற்படுள்ளதற்காக அவர் ஜூலை இறுதியில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10 அன்று சோனியா காந்தியை கட்சியின் இடைக்கால தலைவராக கட்சி மீண்டும் நியமித்தது.

இந்நிலையில்டெல்லியின் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் காங்கிரஸ் 135வது ஆண்டு தொடக்க விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட போது மீண்டும் கட்சியின் தலைமை குறித்த பேச்சு எழுந்தது.

நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்தத் தலைவருமான திக்விஜய் சிங் இதுகுறித்து கூறியதாவது:

''ராகுல் கட்சித் தலைவர் பதவியை விட்டு வெளியேறி இருக்கக் கூடாது. ஆனால் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். அவர் மீண்டும் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.'' என்றார்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) தொடர்பாக ராகுல் காந்தி பிரதமர் மற்றும் பாஜக அரசாங்கத்தை தீவிரமாக எதிர்த்துவருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிங் இவ்வாறு கூறினார்.

இதேபோன்ற கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில், கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான தாரிக் அன்வர் ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் கூறுகையில், ''தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கான முடிவு முற்றிலும் அவருடையது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் மற்ற கட்சித் தலைவர்களும் அவரை பதவி விலக வேண்டாம் என்று சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் அவர் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார்.

கட்சி ஆர்வலர்கள் மற்றும் பல கட்சித் தலைவர்கள் அவர் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் இப்பொழுதுகூட அவர் முடிவு எடுத்து மீண்டும் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்.''

இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x