Published : 28 Dec 2019 07:34 AM
Last Updated : 28 Dec 2019 07:34 AM

பயணிகள் ரயில் கட்டணம் உயருகிறது

பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ரயில்வேயின் 8 சேவைகளை ஒன்றிணைத்து இந்தியன் ரயில்வே மேலாண்மை நிறுவனம் (ஐ.ஆர்.எம்.எஸ்.) என்ற ஒரே நிறுவனமாக மாற்ற மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதுபோல பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ரயில்வே துறையில் இந்தநிதியாண்டின் 2-வது காலாண்டில் முந்தைய காலாண்டைவிட வருவாய் குறைந்துள்ளது. பயணிகள் கட்டணம் ரூ.155 கோடியும் சரக்கு கட்டணம் ரூ.3,091கோடியும் குறைந்திருக்கிறது. எனவே வருவாயைப் பெருக்க பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ரயில்வே வாரிய தலைவர்வி.கே.யாதவ் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

லாரிகள் போக்குவரத்து கட்டணத்தைவிட ரயில் சரக்கு கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் ரயில் சரக்கு வருவாய் குறைந்து வருகிறது. வருவாயை உயர்த்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணத்தை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மிக முக்கிய விவகாரம் என்பதால் இப்போதைக்கு எதுவும் கூற முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:

லாரிகள் போக்குவரத்து கட்டணத்தை விட ரயில் சரக்கு கட்டணம் அதிகமாக உள்ளதால் சரக்கு கட்டணத்தை சிறிதளவு குறைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் சரக்கு ரயில் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும், பயணிகள் ரயில் கட்டணத்தைஉயர்த்துவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விரைவில்ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.பயணிகள் ரயில் கட்டணத்தை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x