

தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது டெல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அசாமை தவிர்த்து இதர மாநிலங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் அருந்ததி ராய் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அவர் கூறியதாவது:
தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னோட்டமாக தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் திரட்டப்படும் தகவல்கள் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும். மத்திய அரசு முஸ்லிம்களுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. எனவே மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்புக்காக வரும்போது உங்கள் பெயர், முகவரிகளை மாற்றிக் கூறுங்கள். உதாரணமாக பெயரைக் கேட்டால், 'ரங்கா-பில்லா' என்று கூறுங்கள். முகவரியை கேட்டால், 'எண் 7, ரேஸ் கோர்ஸ் சாலை, டெல்லி' (பிரதமரின் முகவரி) என்று கூறுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜீவ் குமார் ரஞ்சன், டெல்லி திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் அருந்ததி ராய் மீது புகார் அளித்துள்ளார். அதில், தேசத்தின் நலனுக்கு எதிராக அருந்ததி ராய் பேசியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் அவர் மீண்டும் அவதூறாக பேச மாட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கண்டனம்
பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “அருந்ததி ராய் நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சர்மா முகமது கூறும்போது, “மக்கள் தொகை பதிவேடு திட்டத்தை புறக்கணியுங்கள் என்று கூறலாம். பிழையான தகவல்களை அளிக்க கூறுவது தவறு” என்று தெரிவித்துள்ளார்.