Last Updated : 26 Dec, 2019 06:33 PM

 

Published : 26 Dec 2019 06:33 PM
Last Updated : 26 Dec 2019 06:33 PM

ரயில் பயணிகள் டிக்கெட், சரக்கு கட்டணம் உயர்கிறதா?- ரயில்வே வாரியத் தலைவர் மழுப்பல்

ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை மாற்றி அமைக்கும் பணியில் ரயில்வே வாரியம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு ரயில்வே துறையிலும் எதிரொலித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் முதல் வரையிலா மாதங்களில் ரயில்வேக்கு ரூ.19 ஆயிரத்து 412 கோடி மட்டுமே சரக்கு போக்குவரத்தில் வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் ரயில்வே திட்டமிட்டதைக் காட்டிலும் மிகக் குறைவாகும்.

மேலும் ரயில் பயணிகள் கட்டணமும் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. ரூ. 1.18 லட்சம் கோடி திட்டமிட்ட நிலையில் ரூ.99 ஆயிரத்து 223 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது

ஆனால், செலவின் அடிப்படையில் ரூ.97ஆயிரத்து 265 மதிப்பிடப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.4ஆயிரத்து 99கோடி செலவாகியுள்ளது. பயணிகள் இயக்கத்துக்கான செயல்பாட்டு, இயக்கச் செலவைக் கூட சரிசெய்ய முடியாமல் ரயில்வே துறை திணறி வருகிறது.

ரயில்வே துறைக்கு வரும் வருவாயில் 95 சதவீத லாபம் சரக்குக் கட்டணம் மூலமே கிடைத்துவருகிறது. அதை வைத்துத்தான் மற்ற பயணிகள் பிரிவிலும், மற்ற இயக்கச் செலவிலும் ஏற்படும் இழப்பு ஈடுசெய்யப்பட்டு வருகிறது

இதனால் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் இருபிரிவுகளில் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் ரயில் வாரியம் ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிலோமீட்டருக்கு 5 பைசா முதல் 40 பைசா வரை கட்டணம் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது

ஏ.சி. வகுப்பு முதல், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வரை, புறநகர் ரயில்கள், சீசன் டிக்கெட் ஆகிய அனைத்திலும் கட்டண உயர்வு இருக்கக் கூடும் எனத்தெரிகிறது

கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகக் கடந்த மாதம் ரயில்வே துறை, பிரதமர் அலுவலகத்திடம் பேசி சம்மதம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், " ரயில்வே துறையில் வருவாய் பற்றாக்குறை நிலவுகிறது. அதைச் சரிசெய்யும் பல்வேறு நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் ஈடுபட்டு வருகிறது. பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணத்தை மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ரயில்வே பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது என்பது மிகவும் தீவிரமான விஷயம் நீண்ட ஆலோசனைக்குப் பின்புதான் இந்த முடிவை எடுப்போம். ஆனால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. ஏற்கெனவே சரக்குக் கட்டணங்கள் மிகவும் உயர்வாக இருக்கின்றன. எங்களின் நோக்கம் சாலை சரக்குப் போக்குவரத்தை ரயில்வே சரக்கு போக்குவரத்துக்கு அதிகமாக மாற்றுவது மட்டும்தான் " எனத் தெரிவித்தார்

ரயில்வே பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறோம் எனத் தெரிவித்த ரயில்வே வாரியத் தலைவர் யாதவ், பயணிகள் டிக்கெட் கட்டணம் உயர்கிறதா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x