Last Updated : 26 Dec, 2019 05:20 PM

 

Published : 26 Dec 2019 05:20 PM
Last Updated : 26 Dec 2019 05:20 PM

அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திய 1,200 மாணவர்கள் மீது உ.பி. போலீஸார் வழக்குப் பதிவு

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. வளாகத்தினுள் ஊர்வலம் அமைதியாக நடைபெற்ற நிலையில், 1,200 மாணவர்கள் மீது உ.பி. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாட்டின் பழமையான மத்திய பல்கலைக்கழகங்களில் அலிகர் முஸ்லிம் பல்கலை.யும் ஒன்று. இங்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். இதற்கிடையில், டிசம்பர் 23-ம் தேதி மாலை, பல்கலை. வளாகத்தில் சுமார் 2,000 பேர் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தினர்.

இதன் மூலம், அலிகரில் அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவை மீறியதாக 1,200 மாணவர்கள் மீது உ.பி. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது அலிகர் மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் எவரது பெயரையும் போலீஸார் குறிப்பிடவில்லை என்பதால், எந்த மாணவர் வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

டிசம்பர் 11-ல் நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது முதல் அலிகர் பல்கலைக்கழகத்தில் போராட்டம் தொடங்கி நடைபெறுகிறது. டிசம்பர் 15-ல் ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்து தாக்கிய டெல்லி போலீஸாரைக் கண்டித்தும் அலிகரில் போராட்டம் நடைபெற்றது.

இதில், பதிவாளர் அப்துல் ஹமீது அனுமதியுடன் வளாகத்தில் நுழைந்த போலீஸார், மாணவர்கள் மீது பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் 26 மாணவர்கள் கைதாகி ஜாமீனில் விடப்பட்டனர். ஜனவரி 5 வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட பின்பும், வளாகத்தினுள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பல்வேறு வகைகளில் தம் போராட்டத்தை தொடர்கின்றனர். இது மட்டுமின்றி, வளாகத்தினுள் முக்கிய வாசலின் உள்புறமாக ஒரு சிறு குழுவாக மாணவிகள் தம் போராட்டத்தை அன்றாடம் தொடர்ந்து வருகின்றனர்.

இவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் போடப்படாத நிலையில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திய 1,200 மாணவர்கள் மீதான வழக்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது 144 தடை உத்தரவை மீறியதாகவும், அனுமதி இன்றி ஊர்வலம் நடத்தியதாகவும் புகார் பதிவாகி உள்ளது.

கையில் குண்டுபட்டவருக்குப் பணி
டிசம்பர் 15-ல் வளாகத்தில் போலீஸார் வீசிய கண்ணீர்ப் புகைக்குண்டால் முகம்மது தாரீக் எனும் ஆய்வு மாணவரின் வலது கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், பல்கலை. நிர்வாகம் வேதியல் துறையில் தற்காலிக உதவிப் பேராசிரியராக அவரைப் பணி அமர்த்தியுள்ளது.

பணிக்கு எதிர்ப்பு
தாரீக்கை பணியமர்த்தியது தவறு என பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத்தின் உறுப்பினர்கள் கண்டித்துள்ளனர். இதனால், அதை ரத்து செய்யக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அலிகரில் உள்ள பாஜகவின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரான சாணக்யா அக்கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர், கண்ணீர்ப் புகைக் குண்டைப் பிடித்து போலீஸார் மீது திருப்பி வீசி கலவரத்தைத் தூண்ட தாரீக் முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x