Published : 26 Dec 2019 03:24 PM
Last Updated : 26 Dec 2019 03:24 PM

‘‘இது சரியான தலைமை அல்ல’’ - குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து ராணுவ தளபதி கருத்து

புதுடெல்லி

குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ள ராணுவ தளபதி பிபின் ராவத், இது சரியான தலைமை அல்ல எனக் கூறியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்த நேரடியாக குறிப்பிடாமல் பேசினார். அவர் கூறியதாவது:

‘‘தலைவர் என்பது வெறும் தலைமை ஏற்பது மட்டுமல்ல. நீங்கள் முன்னே செல்லும் போது, மற்றவர்கள் தங்களை பின் தொடர்வார்கள் என்ற எண்ணம் வேண்டும். இது சாதாரமானது அல்ல.

மிகவும் எளிமையான விஷயம் போல தோன்றும். ஆனால், இது மிகவும் சிக்கலான விஷயம். உங்களை சரியான திசையில் வழிநடத்தி செல்பவர்களே தலைவர்கள். தவறாக வழி நடத்தி செல்பவர்கள் தலைவர்கள் அல்ல.

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவில் கூடி போராட்டம் நடத்தியதை பார்த்தோம். இதன் மூலம் நமது நகரங்களில் வன்முறைச் சம்பவஙகள் நடந்ததையும் பார்த்தோம். இது தலைமைத்துவம் அல்ல’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x