

மங்களூரு வன்முறைச் சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இதன் முடிவுக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் கடந்த 19-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மங்களூரு துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மங்களூரு மாநகர காவல் துறை அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களின் 12 வீடியோ பதிவுகளையும், 10-க்கும் மேற்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அதில் வன்முறையாளர்கள் போலீஸார் மீது கல்வீசும் காட்சிகளும், சிசிடிவி கேமராக்களை உடைப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா, மங்களூருவில் நடந்த போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மங்களூரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மங்களூரு வன்முறைச் சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் முடிவுக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். அதுவரை எதிர்க்கட்சிகள் அமைதி காக்க வேண்டும்’’ எனக் கூறினார்.