‘‘குடியுரிமைச் சட்டம் பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள்’’ - அமித் ஷா வேதனை

‘‘குடியுரிமைச் சட்டம் பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள்’’ - அமித் ஷா வேதனை
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா வேதனை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இதுகுறித்து பாஜக தலைவர் அமித் ஷா கூறியதாவது:
‘‘குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதனை நாடாளுமன்றத்திலேயே நான் தெளிவுபடுத்தியுள்ளேன். இந்த நாட்டின் குடிமக்கள் யார், வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகளில் யாருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை பற்றி மட்டுமே குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விளக்கம் அளிக்கிறது.

இந்த நாட்டின் குடிமக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது குடியுரிமையை பற்றிய எந்த கேள்வியும் இல்லை. அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in