Published : 25 Dec 2019 12:46 PM
Last Updated : 25 Dec 2019 12:46 PM

‘‘கிழக்கில் தான் சூரியன் உதிக்கும். இந்த உண்மையை யாராலும் மறைக்க முடியாது’’- அமித் ஷாவுக்கு ஒவைசி சரமாரி கேள்வி

ஹைதராபாத்

என்ஆர்சியின் முன்னோட்டம் தான் என்பிஆர், 2020-ம் ஆண்டுக்குள் இதனை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது என அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியதாவது:

கடந்த 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்படாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். என்ஆர்சியின் முன்னோட்டம் தான் என்பிஆர். 2020-ம் ஆண்டுக்குள் இதனை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.

பிறகு ஏன் மக்களை ஏமாற்ற வேண்டும். நாடுமுழுவதும் என்ஆர்சி அமல்படுத்தப்பட்டே தீரும் என நாடாளுமன்றத்தில் விவாதத்தின்போது என்னை பார்த்து அமித் ஷா ஆவேசமாக கூறினார். பிறகு மக்களை இப்போது அவர் ஏமாற்ற முயற்சி செய்வது ஏன். கிழக்கில் தான் சூரியன் உதிக்கும். இந்த உண்மையை மறைக்க யாராலும் முடியாது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x