Published : 24 Dec 2019 11:06 AM
Last Updated : 24 Dec 2019 11:06 AM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: வன்முறை தொடர்பாக 21500 பேர் மீது வழக்குப்பதிவு


குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது கடந்த ஒருவாரத்தில் நடந்த வன்முறை தொடர்பாக கான்பூரில் 21 ஆயிரத்து 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் கடந்த ஒருவாரத்தில் நடந்த வன்முறை தொடர்பாக கான்பூரில் 21 ஆயிரத்து 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கான்பூர் சரக காவல்துறை கண்காணிப்பாளர் ஆண்ட் தியோ கூறுகையில் ‘‘குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த ஒருவார காலமாகவே கான்பூரில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பெருமளவு வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கான்பூரில் பல்வேறு காவல்நிலையங்களில் மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்ய்பட்டுள்ளன. மொத்தம் 21500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x