

ஜார்க்கண்டிலும் ஆட்சியை இழந்த பாஜகவிடம் இருப்பது நாட்டின் 42% ஆட்சி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது, கடந்த இரண்டு வருடங்களில் பாஜக இழக்கும் ஏழாவது மாநிலமாக அமைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அலையால் 2014 மக்களவைத் தேர்தலில் ஆட்சியில் அமர்ந்தது பாஜக. இரண்டாவது முறையும் அக்கட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியில் மீண்டும் பிரதமரானார் மோடி. இதனிடையில், கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக மற்றும் அதன் ஆதரவில் நாட்டின் 19 மாநிலங்களில் ஆட்சி இருந்தது. இது நாட்டின் 72% மக்கள் தொகையாகக் கருதப்படுகிறது.
இதில் முதலாவதாக, ஆந்திராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியுடனான உறவு முறிந்தது. இங்கு அப்போது தேர்தல் வரவில்லை என்றாலும் அம்மாநிலத்தின் சிறப்பு அதிகாரப் பிரச்சினை காரணமானது.
அடுத்து 2019-ல் வந்த சட்டப்பேரவை தேர்தல்களில் ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் பாஜக தன் ஆட்சியை இழந்தது. பிறகு சமீபத்தில் நடைபெற்ற இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் ஹரியாணாவில் இருந்த தனி மெஜாரிட்டி பலத்தை இழந்தது.
இதனால், சிறிய கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஹரியாணாவில் தன் ஆட்சியைத் தக்க வைத்தது பாஜக, எனினும், முக்கிய மாநிலமான மகாராஷ்டிராவில் தம் பழம்பெரும் கூட்டணியான சிவசேனாவால் பாஜக தன் ஆட்சியை மீண்டும் அமைக்க முடியாமல் போனது.
இதனிடையே, 2018 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் நிலவிய கூட்டணி ஆட்சியில் பிடிபி பாஜகவிடம் இருந்து விலகியது. இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீரிலும் ஆட்சி கவிழ்ந்து ஆளும் வாய்ப்பை பாஜக இழந்தது.
இம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5-ல் ரத்தானதுடன், அதில் இருந்து லடாக் தனியாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு ஆட்சி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு வருடங்களில் பாஜக இழந்த ஏழாவது மாநிலம் ஆகும்.
எனினும், இந்த சூழலிலும் பாஜக கர்நாடகா, மிசோராம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஆட்சியை அமைத்துள்ளது. இவற்றில் கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவிற்கு ஒருசில எம்எல்ஏக்கள் மட்டும் உள்ளனர்.
எனவே, இரண்டு வருடங்களுக்கு முன் நாட்டின் 72% மக்கள் தொகையின் ஆட்சியில் பாஜக பங்கு வகித்திருந்தது. அதில் தற்போது ஏழு மாநிலங்களில் இழப்பாகி பாஜகவின் கீழ் உள்ள 16 மாநிலங்களில் மட்டும் ஆட்சி நீடிக்கிறது.
பிஹாரின் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. இங்கு 2020 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.