Published : 25 Aug 2015 09:21 AM
Last Updated : 25 Aug 2015 09:21 AM
அனைத்து வியாபம் வழக்குகளையும் சிபிஐ மட்டுமே விசாரிக்க வேண்டும், இந்த வழக்குகளில் ஆஜராக மூன்று வாரங்களுக்குள் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வியாபம் முறைகேடு தொடர்பாக சுமார் 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 78 வழக்குகளில் மாநில சிறப்பு பிரிவு போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் வியாபம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் வாதிட்டபோது, ஊழியர் பற்றாக்குறை காரணமாக மாநில போலீஸாரும் வியாபம் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துளசி இதனை கடுமையாக ஆட்சேபித்தார். வழக்கின் முக்கியத்துவம் கருதி அனைத்து வழக்குகளையும் சிபிஐ போலீஸாரே விசாரிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்து வியாபம் வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளில் ஆஜராக மூன்று வாரங்களுக்குள் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT