Published : 21 Dec 2019 02:31 PM
Last Updated : 21 Dec 2019 02:31 PM

என்ஆர்சியில் என்ன உள்ளது என தெரியாமல் ஏன் போராட்டம்; முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும்: ஷியா பிரிவுத் தலைவர் வேண்டுகோள்

என்ஆர்சியில் என்ன உள்ளது என தெரியாமல் ஏன் போராட வேண்டும், அரசியல் கட்சிகள் திசை திருப்புகின்றன, முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இந்தநிலையில், லக்னோவைச் சேர்ந்த ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத் இதுகுறித்து கூறியதாவது:

‘‘என்ஆர்சி என்பது அசாம் மாநிலத்தில் மட்டும் தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாடுமுழுவதும் அமல்படுத்தப்படாது. அதுமட்டுமின்றி அதில் என்ன ஷரத்துகள் உள்ளன என்பது பற்றி நமக்கு இப்போது தெரியாது. அதற்குள் முஸ்லிம்கள் எதற்காக போராட வேண்டும்.

அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை திசை திருப்புகின்றன. எனவே முஸ்லிம்கள் இதுபோன்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். அமைதி காக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x