வெறும் அறிக்கையுடன் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் கடும் தாக்கு

வெறும் அறிக்கையுடன் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் கடும் தாக்கு
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் முதல்வர்களே நேரடியாக தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர், ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வெறும் அறிக்கையை மட்டும் வெளியிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி கொண்டது ஏன் என ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் துணைத் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் அரசியல்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதுபற்றி ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் துணைத் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் முதல்வர்களே நேரடியாக தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வெறும் அறிக்கையை மட்டும் வெளியிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி கொண்டனர்.

பிரியங்கா காந்தி மட்டுமே டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். ஆனால் சோனியா காந்தி கூட அறிக்கை தான் வெளியிடுகிறார். ராகுல் காந்தியும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதுபோலவே காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்தார்கள். ஆனால் மற்ற முதல்வர்களை போல அவர்கள் தெருவில் இறங்கி போராட தயக்கம் காட்டுகின்றனர்’’ எனக் கூறியுள்ளார்.

முன்னதாக ஐக்கிய ஜனதாதளக் கட்சித் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமாரை சந்தித்து குடியுரிமைச் சட்டத்துக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என பிரசாத் கிஷோர் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in