Published : 21 Dec 2019 11:57 AM
Last Updated : 21 Dec 2019 11:57 AM
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் ஐ.நா.,வின் தலையீட்டைக் கோரும் மம்தா பானர்ஜி பாகிஸ்தானியைப் போலப் பேசுகிறார் எனச் சாடியுள்ளார் மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ்.
முன்னதாக மம்தா பானர்ஜி, "பா.ஜ.க-வுக்குத் தைரியம் இருந்தால், ஐ.நா-வின் கண்காணிப்பில் குடியுரிமைச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி மீதான வாக்கெடுப்பை நடத்தட்டும். பெருவாரியான வாக்குகளைப் பா.ஜ.க பெறவில்லை என்றால் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்" என்று சவால் விடுத்திருந்தார்.
இதனை சுட்டிக்காட்டியுள்ள திலீப் கோஷ், மம்தா பானர்ஜி பாகிஸ்தானின் மொழியில் பேசுகிறார். பாகிஸ்தான் நாடுதான் எல்லா பிரச்சினைக்கும் ஐ.நா. மத்தியஸ்தத்தைக் கோரும். அதே பாணியில் மம்தாவும் ஐ.நா தலையீட்டைக் கோரியுள்ளார்.
அவருக்கு நீதித்துறை மீதும் நம்பிக்கையில்லை, நாடாளுமன்றத்தின் மீதும் நம்பிக்கையில்லை. அதனால் அவருக்கு அரசாங்கத்தை வழிநடத்தத் தகுதியில்லை. அவரது ஆட்சி கலைக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் மம்தா பானர்ஜியின் ஐ.நா., தலையீட்டைக் கோரும் பேச்சு சர்ச்சையானதால் அவர் அது குறித்து விளக்கமும் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "நான் வாக்கெடுப்பு குறித்து கூறவில்லை. மனித உரிமைகள் ஆணையம் போன்றோரின் மேற்பார்வையில் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என்பதையே கூற வந்தேன்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் மீதும் என்ஆர்சி-யின் மீதும் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம்" எனக் கூறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT