‘‘பிடிவாதத்தை கைவிடுங்கள்’’ - மத்திய அரசுக்கு மாயாவதி அறிவுரை

‘‘பிடிவாதத்தை கைவிடுங்கள்’’ - மத்திய அரசுக்கு மாயாவதி அறிவுரை
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் பிடிவாதப் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் அரசியல்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகள், அமைப்புகளை தாண்டி பொதுமக்களும் போராட்டக் களத்தில் உள்ளனர்.

தற்போது மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புக் குரலை பதிவு செய்துள்ளன. எனவே மத்திய அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதுபோலவே போராட்டம் நடத்துபவர்களும் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in