Last Updated : 19 Dec, 2019 06:23 PM

 

Published : 19 Dec 2019 06:23 PM
Last Updated : 19 Dec 2019 06:23 PM

அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்: உண்மை அறியும் குழுவின் விசாரணையில் தகவல்  

புதுடெல்லி

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மத்திய பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக தாக்கியது தெரியவந்துள்ளது. இதன் மீதான உண்மை அறியும் குழுவின் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 15 ஆம் தேதி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் டெல்லி போலீஸார் அத்துமீறி நுழைந்து மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தம் வளாகத்தின் உள்ளே இரவு 10 மணிக்குப் போராட்டம் நடத்தினர்.

இதில் திடீர் என அதன் நிர்வாக அனுமதியுடன் மத்திய பாதுகாப்புப் படையின் ரேப்பிட் ஆக்‌ஷன் போர்ஸ் பிரிவு நுழைந்தது. இவர்கள், மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல் குறித்து பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக டெல்லியின் பிரபல மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான‘ஹுமன் ரைட்ஸ் லா நெட்வொர்க்’ விசாரணை செய்திருந்தது. இதன் உறுப்பினர்களாக டெல்லியின் வழக்கறிஞர்களான அமன் கான் மற்றும் பைஸல் அப்தாலி இடம் பெற்றனர்.

இவர்களுடன் இணைந்த பவாஸ் ஷாஹீன், டெல்லியின் 'குலீல் பவுண்டேஷன்' எனும் மற்றொரு மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர். இவர்கள் மூவரும் அலிகரில் நடத்திய விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''டிசம்பர் 15, மாலை 7.30 மணிக்கு ஜாமியா மிலியா சம்பவம் மீது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் கூடிப் பேசினர். இதன் முடிவுகளின்படி அவர்கள் 8 மணிக்கு தம் முக்கிய நுழைவு வாயிலின் கதவை மூடி அதன் உள்ளே நின்றபடி போராட்டம் நடத்தினர்.

அப்போது, மாணவர்களைக் கடும் சொற்களால் ஏசிய பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது கல் எறிந்து தூண்டியுள்ளனர். இதில் மாணவர்களும் பாதுகாப்புப் படையினர் மீது கல் எறியத் தொடங்கினர்.

இதனிடையே, அதன் நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பாதுகாப்புப் படையினர் திடீர் என வாயில் இரும்புக்கதவின் பூட்டை இரவு 10 மணிக்கு உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இத்துடன் தேவை இல்லாமல் மாணவர்கள் மீது தடிகளால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் ஆரம்பித்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள் ஆகியவற்றுடன் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் மாணவர்கள் மீது சுட்டுள்ளனர். இதில், ஒரு மாணவரின் கையில் கண்ணீர் புகை குண்டு பட்டு வெடித்ததால் மாணவர் படுகாயம் அடைந்தார்.

பல்கலைக்கழகத்தின் 2 பாதுகாவலர் உள்ளிட்ட 21 மாணவர்கள் எங்கு இருக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. இவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தெரியாமல், போலீஸாரால் பிடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.

வளாகத்தின் சாலைகள் மட்டும் அன்றி, அங்குள்ள சர் சையது வடக்கு பகுதி விடுதி, அப்தாப் விடுதி மற்றும் மோரீஸன் விடுதியிலும் அத்துமீறிப் புகுந்துள்ளனர். இங்கிருந்த பல்கலைக்கழகப் பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்கள் மீதும் தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மோரிஸன் விடுதியின் அறை எண் 46-ல் தீ வைத்துக் கொளுத்தியதுடன், பல அறைகளின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துள்ளனர். அங்கு இவர்களால் பிடித்துச் சென்ற மாணவர்கள், அனைவரும் எந்த போராட்டத்திலும் பங்கெடுக்காமல் தனது அறைகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள்.

இந்தத் தாக்குதலின் விளைவாக மொத்தம் 60 மாணவர்கள் படுகாயங்களுடன் வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் தன்ஜீம் என்பவரது நிலை மோசமாகி டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்''.

இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரங்களாக வீடியோ பதிவுகள்

தம் விசாரணைக்காக மொபைல்களின் வீடியோ பதிவுகளையும் ஆதாரங்களாக அக்குழுவினர் பத்திரிகைகளிடம் வெளியிட்டனர். இதில், பாதுகாப்புப் படையினர் மாணவர்கள் விடுதிகளின் முன் இருந்த இருசக்கர வாகனங்களைச் சேதப்படுத்தி இருப்பது தெரிகிறது.

பொதுமக்கள் ஆதரவு

இந்நிலையில், உ.பி. போலீஸாரால் கைதான 26 மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறும்படி பல்கலைக்கழகத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் நகரின் நான்கு இடங்களில் ஆயிரக்கணக்கில் கூடி நான்கு நாட்களாக தர்ணா நடத்தி வருகின்றனர்.

ஹர்ஷமந்தர் தலைமையில் விசாரணை

இதனிடையே, சமூக ஆர்வலரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் ஹர்ஷமந்தர் நேரில் சென்று பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். பிறகு ஹர்ஷமந்தர் தலைமையில், மனித உரிமை ஆர்வலரான ஜான் தயாள் உள்ளிட்டோரும் அலிகர் பல்கலைக்கழக சம்பவத்தில் விசாரணை நடத்தினர். இதன் அறிக்கை விரைவில் டெல்லியில் வெளியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x