

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடக்கிய காங்கிரஸுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துமாறு தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 21-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது. இதனால் எவ்வித அலுவலும் நடைபெறாமல் நேற்று இந்த கூட்டத் தொடர் முடிந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒவ்வொன்றாக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக வங்கதேசத்துடனான நில எல்லை ஒப்பந்தம், நாகா அமைதி ஒப்பந்தம் ஏற்படுத் தப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஏழை மக்களின் நலனுக்காகவும் மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. ஆனால் அரசின் வேகமான வளர்ச்சியைக் கண்டு கவலை அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி அதைத் தடுக்க முயற்சித்து வருகிறது. இதை அனுமதிக்கக்கூடாது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதையும் செயல்பட விடாமல் காங்கிரஸ் கட்சி தடுத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடத்தை அவசரநிலை கால அணுகுமுறையை நினைவு படுத்துவதாக உள்ளது.
குடும்பத்தைக் காப்பாற்ற காங்கிரஸ் விரும்புகிறது, பாஜகவோ நாட்டைக் காப்பாற்ற விரும்புகிறது.
காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்துக்கு எதிரான இந்த செயலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க முயலும் காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கம் குறித்து அமைச்சர்களும், என்டிஏ நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களிடத்தில் முறையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லியில் பேரணி
என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத் துக்குப் பிறகு ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பெயரில் பேரணி நடைபெற்றது.
விஜய் சவுக் பகுதியிலிருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை வரையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் இதில் பங்கேற்றனர். இந்தப் பேரணியின்போது, ஜனநா யகத்தைக் காப்போம் என்ற வாசகம் அடங்கிய பேனரை ஏந்தி கோஷம் எழுப்பினர்.
காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளின் எதிர்ப்பு அரசியல் மனப்பான்மையை அம்பலப் படுத்தும் வகையில் நாடு முழுவதும் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் எம்.பி.க்களின் தொகுதிகளில் இத்த கைய பிரச்சாரம் மேற்கொள் ளப்பட உள்ளன.