

குடியுரிமைச் சட்டத்தை ஆதரிக்கும் அதேவேளையில் என்ஆர்சியை எதிர்க்கிறோம் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளாார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது.
இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
ஒடிசா மாநிலத்திலும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. இந்தநிலையில் இதுபற்றி அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
‘‘குடியுரிமைச் சட்டம் என்பது இந்தியர்களுடன் தொடர்பு உடையது அல்ல. இது வெளிநாட்டினர் தொடர்புடையது. எனவே இதனை பிஜூ ஜனதாதளம் ஏற்றுக் கொண்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இதனை நாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம். அதேசமயம் இந்திய குடிமக்கள் பதிவேடு என்பது இந்தியர்கள் தொடர்புடையது. இதனை நாங்கள் ஏற்கவில்லை. எனவே என்ஆர்சியை நாங்கள் எதிர்க்கிறாம்’’ எனக் கூறினார்.