Last Updated : 17 Dec, 2019 03:47 PM

 

Published : 17 Dec 2019 03:47 PM
Last Updated : 17 Dec 2019 03:47 PM

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை மறுஆய்வு கோரும் கைதியின் வழக்கில் இருந்து தலைமை நீதிபதி போப்டே திடீர் விலகல்

நிர்பயா பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 கைதிகளில் ஒருவரான அக்சய் குமார் தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே திடீரென விலகுவதாகத் தெரிவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு, 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அதன்பின் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்
மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. கடந்த 2018-ம் ஆண்டு, ஜூலை 9-ம் தேதி இந்த 4 குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால், வழக்கில் 4-வது குற்றவாளியான அக்சய் குமார் சிங் மட்டும் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி அக்சய் குமார் சிங் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்சய் குமார் சிங் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில், நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் பூஷன் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து தான் விலகிக் கொள்வதாகத் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறுகையில், " தன்னுடைய உறவினர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சார்பாக வாதிடுகிறார். இந்த சூழலில் தான் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதால் இதில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். புதிய அமர்வு நாளை இந்த வழக்கை விசாரிக்கும்.

இந்த புதிய அமர்வில் இடம் பெறும் நீதிபதிகள் குறித்து நாளை காலை அறிவிக்கிறேன். நாளை பிற்பகலுக்குப்பின் இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும்" என அறிவித்தார்

அப்போது நீதிமன்றதில் நிர்பயாவின் தந்தை, தாயார் ஆஷா தேவி ஆகியோரும் இருந்தனர்.

நீதிமன்றத்துக்கு வெளியே நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்" தூக்குத் தண்டனைக் கைதியின் மறு ஆய்வு மனு இன்று தள்ளுபடி செய்யப்படும் என்று நம்பி இருந்தேன். நாங்கள் ஏற்கனவே 7 ஆண்டுகள் காத்திருந்துவிட்டோம். இன்னும் ஒருநாள் காத்திருக்கிறோம். நாளை இந்த மனு தள்ளுபடி செய்யப்படும், என் மகளை என்னிடம் இருந்து பிரித்தவர்களுக்கு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன் " எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x