

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான். ராம்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இவரது மகன் அப்துல்லா கான் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு சுவார் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 25 வயது ஆனவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், தேர்தலில் போட்டியிட்டபோது 25 வயது ஆகாத நிலையில், தனது வயது தொடர்பாக போலியான சான்றிதழ்களை வேட்புமனுவில் அவர் தாக்கல் செய்ததாகக் கூறி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த காசிம் கான் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்து அப்துல்லா கானின் வயது தொடர்பான ஆவணங்களையும் பரிசீலித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அவரது எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்து நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பு குறித்தும் தொடர் நடவடிக்கைக்காகவும் தேர்தல் ஆணையத்துக்கும் உ.பி. சட்டப்பேரவை சபாநாயகருக்கும் தகவல் தெரிவிக்க நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.