குடியுரிமைச் சட்டத் திருத்தம்; சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டெல்லி போலீஸார் எச்சரிக்கை

குடியுரிமைச் சட்டத் திருத்தம்; சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டெல்லி போலீஸார் எச்சரிக்கை
Updated on
1 min read

டெல்லி மற்றும் அலிகரில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தச் சட்டத்துக்கு மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம், அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் வன்முறை வெடித்தது. மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 120க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இன்று பல இடங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்ப வேண்டாம் என்று டெல்லி நொய்டா போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நொய்டாவின் மூத்த போலீஸ் அதிகாரியான வைபவ் கிருஷ்ணா கூறும்போது, ''நாங்கள் தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களைக் கண்காணித்து வருகிறோம். ஆட்சேபிக்கத்தக்க கருத்துகளை ஆன்லைனில் பகிர்பவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். மேலும் வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். வதந்திகள் பரப்பினால் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in