

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்திய தடியடியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது. இதனால் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்திய தடியடியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், ஏ.கே அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது டெல்லி ஜாமியா மிலியா மற்றும் அலிகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.