Published : 16 Dec 2019 10:15 AM
Last Updated : 16 Dec 2019 10:15 AM

உண்ணாவிரதம் இருந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவி மயக்கம்: மருத்துவமனையில் சிகிச்சை

திஷா மசோதாவை உடனடியாக இந்தியா முழுவதும் அமல்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மலிவால் மயக்கமடைந்து விழுந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் டாக்டர் பிரியங்கா கொலை வழக்கு, உன்னாவ் சிறுமி எரிப்பு விவகாரம் போன்ற தொடர் சம்பவங்களுக்குப் பிறகு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டுமென்ற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இதற்கிடையே, பாலியல் வன்கொடுமை வழக்குகளை குறுகிய காலத்தில் விசாரித்து மரண தண்டனையை நிறைவேற்றும் திஷா மசோதாவை உடனடியாக இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனக் கூறி டெல்லி மகளிர் ஆணைய தலைவியான ஸ்வாதி மலிவால் டெல்லி ராஜ்காட்டில் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து மயக்கமடைந்து விழுந்தார். சுயநினைவிழந்த அவரை உடனடியாக டெல்லியிலுள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு உண்ணாவிரத ஏற்பாட்டாளர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு நினைவு திரும்பியது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கமுயன்றனர். ஆனால் டாக்டர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தார். பின்னர் டாக்டர்களின் வற்புறுத்திய பின்னர் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது அவரது நிலைமை சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x