

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் அமலாக்கப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து வடகிழக்கு மாநிலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழகத்தின் மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.
அந்த பல்கலைக்கழக மாணவர் நேற்று வளாகத்தினுள் கூடிமத்திய அரசிற்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பினர். வளாகத்தின் உள்ளே இருந்து மாணவர்கள் வெளியில் வராதபடி டெல்லி போலீஸார் இரும்பாலான தடுப்புகள் அமைத்திருந்தனர். இதன் மீது ஏறிய மாணவர்கள் தம் வளாகத்தின் வாயிலை விட்டு வெளியே வந்தனர்.
இதற்கான அனுமதியை டெல்லி போலீஸார் மாணவர்களுக்கு அளிக்கவில்லை. எனவே, அவர்களை தடுத்து நிறுத்திய போது இருதரப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், டெல்லி போலீஸார் வளாகத்தினுளும் நுழைந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதன் பிறகும் மாணவர்கள் கூட்டம் கலையாமல் இருக்கவே அங்கு கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன.
மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெற இருந்தபருவத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை பல்கலைக்கழகம் திறந்தவுடன் போராட்டம் தொடர்ந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.