Published : 14 Dec 2019 10:45 AM
Last Updated : 14 Dec 2019 10:45 AM

தீவிரமாகும் போராட்டம்: வடகிழக்கு மாநிலங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்; குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுறுத்தல்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.

குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து சட்டமாகியுள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வங்கதேசத்தவரின் ஊடுருவலுக்கு எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர். அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் வங்கதேச இந்து அகதிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அசாம் மற்றும் திரிபுராவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் டயர்களை கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பல்வேறு மாணவர் அமைப்புகளும் இந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளன.

இதனால் குவஹாட்டியில் நடைபெற இருந்த ஜப்பான் - இந்திய பிரதமர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை தனித்தனியாக அறிவுறுத்தியுள்ளன.

அங்கு நிலைமை சீரடையும் வரையில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது என்றும், கட்டாயம் செல்ல வேண்டிய தேவை இருப்பின் உள்ளூர் ஊடக தகவல் மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் செல்லுமாறு அந்த நாடுகள் தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x