Last Updated : 13 Dec, 2019 09:11 PM

 

Published : 13 Dec 2019 09:11 PM
Last Updated : 13 Dec 2019 09:11 PM

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள்-போலீஸார் மோதல்: தடியடி, கண்ணீர்புகை வீச்சு

டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் இன்று குடியுரிமை மசோதாவை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில், அதன் மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் போலீஸாருக்கு இடையே மோதலில் தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டது.

மத்திய அரசால் அமலாக்கப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தவகையில், டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழகத்தின் மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் வளாகத்தினுள் கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்திய அரசிற்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பினர்.

வளாகத்தின் உள்ளே இருந்து மாணவர்கள் வெளியில் வராதபடி டெல்லி போலீஸார் இரும்பாலான தடுப்புகள் அமைத்திருந்தனர். இதன் மீது ஏறிய மாணவர்கள் தம் வளாகத்தின் வாயிலை விட்டு வெளியே வந்தனர்.

இதற்கான அனுமதியை டெல்லி போலீஸார் மாணவர்களுக்கு அளிக்கவில்லை. எனவே, அவர்களை தடுத்து நிறுத்திய போது இருதரப்பினர்களுக்கும் இடையே மோதம் ஏற்பட்டது.

இதில், டெல்லி போலீஸார் வளாகத்தினுளும் நுழைந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதன் பிறகும் மாணவர்கள் கூட்டம் கலையாமல் இருக்கவே அங்கு கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன.

போலீஸாரின் தடியடியால் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரும் சிகிச்சைக்காக அருலிலுள்ள ஹோலி பேமிலி தனியார் மருத்துவமையில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, ஜாமியா பல்கலைகழகத்தின் எழுபதிற்கும் மேற்பட்ட மாணவர்களை டெல்லி போலீஸார் காவல்நிலையத்திற்கு பிடித்துச் சென்றனர். இதனால், டெல்லியில் அப்பல்கலைகழகம் அமைந்துள்ள ஒக்லா பகுதியில் பதட்டம் நிலவியது.

ஏற்கெனவே, உ.பி.யின் அலிகர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் மாணவர்கள் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த மாணவர்கள் போராட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் இணைந்து ஆலோசனை

ஏனெனில், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் மாணவர்கள், வடகிழக்கு மாநில மாணவர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில், போராட்டங்கள் தொடர்வது குறித்து புதிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x