Last Updated : 13 Dec, 2019 08:36 PM

 

Published : 13 Dec 2019 08:36 PM
Last Updated : 13 Dec 2019 08:36 PM

ஓசூரில் பன்முக சிறப்பு மருத்துவமனை: மத்திய அமைச்சரிடம் காங்கிரஸ் மனு

ஓசூரில் பன்முக சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டி காங்கிரஸ் எம்.பியான டாக்டர்.ஏ.செல்லகுமார் வலியுறுத்தி உள்ளார். இதற்கான மனுவை அவர் இன்று மத்திய தொழிளாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சரான சந்தோஷ் குமார் கங்குவாரிடம் அளித்தார்.

இதற்கானக் கடிதத்தில் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பியான டாக்டர்.ஏ.செல்லகுமார் கூறியிருப்பதாவது: எனது தொகுதியில் சுமார் 1.5 லட்சம் பதிவுசெய்யப்பட்ட இஎஸ்ஐ ஊழியர்கள் உள்ளனர்.

ஆறு மருந்தகங்களும் 1.5 லட்சம் பதிவுசெய்யப்பட்ட பயனாளர்களின் பயன்பாட்டிற்கான முதன்மையான பராமரிப்பு மருத்துவமனையும் உள்ளது. தற்போது இஎஸ்ஐ சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபகரணங்கள் கிடைக்காததால் நோயாளிகள் முதன்மை பராமரிப்புக்காக மட்டுமே பரிசோதிக்கப்படுகின்றனர்,

அவற்றில் பல தனியார் மருத்துவமனைகளை மட்டுமே சார்ந்துள்ளது. இதனால் அரசுக்கு அதிக செலவு ஏற்படுகிறது, ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள இஎஸ்ஐ பதிவுசெய்த பயனர்கள் எண்ணிக்கையை சமன் செய்ய முற்படுவதில்லை.

உயிருக்கு ஆபத்தான நோய்களினால், சிகிச்சைக்காக ஊழியர்கள் பெங்களூரு அல்லது சென்னை செல்ல வேண்டியுள்ளது .நாம் அனைவரும் அறிந்தபடி, ஓசூர் ஒரு சர்வதேச தொழில்துறை மையமாகும்.

மேலும் அதில் அதிக ஆபத்தான பணிகள் செய்யப்படும் தொழிற்சாலைகள் உள்ளன. 150 கனரக தொழிற்சாலைகளும் 3000 சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் ஓசூரில் செயல்படுகின்றன.

அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் பல்வேறு ஆபத்தான தொழிற்சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாதிக்கப்படும் தொழிலாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது உள்ள சுகாதார சேவைகளை மேம்படுத்த வேண்டுகிறேன்.

ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனையிடம் விரிவாக்கத்திற்காக ஏற்கனவே 8 ஏக்கர் நிலம் உள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், ஒரு புதிய பன்முக சிறப்பு மருத்துவமனையை முன்பே உள்ள 8 ஏக்கரில் நிறுவக்கூடிய அவசர தேவை உள்ளது.

எனவே, இஎஸ்ஐ மருத்துவமனையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு உதவி செய்திட வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x