Last Updated : 13 Dec, 2019 04:02 PM

 

Published : 13 Dec 2019 04:02 PM
Last Updated : 13 Dec 2019 04:02 PM

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை கைதிகளின் தலைவிதி வரும் 18-ம் தேதி முடிவு - நிர்பயா தாயார் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளதை எதிர்த்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தூக்கு தண்டனை கைதிகளில் ஒருவர் தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரிக்கப்படும் நாளான வரும் 17-ம் தேதி அன்றுதான் நிர்பயா தாயாரின் மனுவும் விசாரிக்கப்பட உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு, 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அவரின் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிங்கப்பூருக்கு மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் 2012, டிசம்பர் 29-ம் தேதி அந்த மாணவி உயிரிழந்தார்

மாணவியைப் பலாத்காரம் செய்த ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நிர்பயா வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. கடந்த 2018-ம் ஆண்டு, ஜூலை 9-ம் தேதி இந்த 4 குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால், வழக்கில் 4-வது குற்றவாளியான அக்ஷய் குமார் சிங் மட்டும் சீராய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி அக்சய் குமார் சிங் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வரும் 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்சய் குமார் சிங் சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு மனுக்களும் வரும் 17-ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

டிசம்-18-ம் தேதி

இதற்கிடையே டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிர்பாயாவின் பெற்றோர் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தங்கள் மகளைக் கொன்ற குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு டெல்லி நீதிபதி சதீஸ் குமார் அரோரா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, " வரும் 17-ம் தேதி நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி அக்சய் குமார் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறது என்பதைக் கவனித்து மறுநாள் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்

உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்துள்ள நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நிருபர்களிடம் பேசுகையில், " என்னுடைய மகளை என்னிடம் இருந்து பிரித்த குற்றவாளிகள் 4 பேருக்கும் 16-ம் தேதிக்கு முன்பாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்படும்வரை என் உயிர் இருக்கும் வரை நான் போராடுவேன் " எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x