Last Updated : 13 Dec, 2019 02:07 PM

 

Published : 13 Dec 2019 02:07 PM
Last Updated : 13 Dec 2019 02:07 PM

ராகுல் காந்திக்கு அவையில் இருக்கத் தகுதியில்லை: ராஜ்நாத் சிங் காட்டம் |சாதாரணமானதுதான்: சசி தரூர் பேச்சு

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

'ரேப் இன் இந்தியா' என்று பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அவையில் இருக்கத் தகுதியில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமாகத் தெரிவித்தார்.

ஆனால், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி பேசியது சாதாரண கருத்துதான். இதற்கு மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநிலம் கோட்டா நகரில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், " நரேந்திர மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இங்கே தினமும் 'ரேப் இன் இந்தியா' நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவால் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அப்பெண் மோசமான விபத்தில் சிக்கினார். ஆனால், அதைப் பற்றி நரேந்திர மோடி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

பெண்களைப் படிக்கவைப்போம்; பாதுகாப்போம் என்று மோடி அறைகூவல் விடுத்தார். ஆனால் யாரிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறவில்லை. பாஜகவினரிடமிருந்து தான் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை" என்று பேசியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு இன்று மக்களவையில் கடுமையாக எதிரொலித்தது. பிரதமர் மோடியையும், பிரதமரின் திட்டங்களையும் மட்டுமல்லாமல் பெண்களையும் அவமதித்துவிட்டார். ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக பாஜக பெண் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். அதேசமயம், ராகுல் காந்தி சூழ்நிலைக்கு ஏற்ற கருத்தைத் தான் பேசியுள்ளார் என்றனர். திமுக எம்.பி. கனிமொழியும், ராகுல் காந்திக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் கருத்து குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், "ராகுல் காந்தியின் பேச்சு மக்களவையை மட்டும் வேதனைப்படுத்தவில்லை, ஒட்டுமொத்த நாட்டையும் வருத்தப்பட வைத்துள்ளது. இதுபோன்ற உறுப்பினர் இந்த அவையில் இருப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை.

ராகுல் காந்தி தனது கருத்துக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். மேக் இன் இந்தியா என்பது, இறக்குமதி அதிகமாக இருக்கும் இந்தியாவில், ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்று கொண்டுவந்தார். இதன் மூலம் நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற நல்ல நோக்கில் அறிமுகம் செய்தார். ஆனால், இப்போது சிலர் மேக் இன் இந்தியா என்ற கருத்தையே மோசமாகச் சித்தரிப்பதை ஏற்க முடியாது" எனத் தெரிவித்தார்.

அதேசமயம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சசி தரூர் நிருபர்களிடம் கூறுகையில், " தேசிய அளவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதிலிருந்து மக்களைத் திசை திருப்பும் நோக்கில் இந்த விவகாரத்தை பாஜகவினர் எழுப்புகிறார்கள்.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி சாதாரணமாகப் பேசியுள்ளார். இதில் மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x