Last Updated : 11 Dec, 2019 04:43 PM

 

Published : 11 Dec 2019 04:43 PM
Last Updated : 11 Dec 2019 04:43 PM

உன்னாவ் பெண் பலாத்கார வழக்கு: சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சாட்சியங்கள் இல்லை- மருத்துவ அதிகாரிகள்

உன்னாவ் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷுபம் திவேதி என்ற நபர் பலாத்காரம் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட அன்றைய தினத்தில் உள்ளூர் மருத்துவமனையில் இருந்ததாக கூறிய அலிபிக்கு எந்த வித சாட்சியங்களும் இல்லை என்று அந்த ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.

உன்னாவ் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 23 வயது பெண் சமீபத்தில் நீதிமன்றத்திற்கு வழக்குக்காக வரும் போது 5 பேர்களால் தீவைக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் டெல்லி மருத்துவமனையில் மரணமடைந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த பெண் தான் அளித்த புகாரில் தன்னை கடந்த ஆண்டு டிச.12ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். ஷுபம் மற்றும் சிவம் ஆகியோர் குற்றவாளிகள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்தான் குற்றம் சாட்டப்பட்ட ஷுபம் திவேதி கடந்த ஆண்டு டிச.10ம் தேதி தான் உள்ளூர் மருத்துவமனையில் ஹைட்ரசில் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டு டிச. 15ம் தேதிதான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன் என்று கோரியிருக்கிறார்.

ஆனால் எந்த சுமேர்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் அனுமதிக்கப்பட்டதாகக் கூறினாரோ அந்த மருத்துவமனையின் அதிகாரிகள் ஷுபம் என்ற பெயரில் எந்த ஒருநோயாளியும் அந்த தினத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று ஆங்கில நாளேடு ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

மருத்துவ அதிகாரி அதே செய்தித் தாளுக்குக் கூறும்போது, ஆவணங்களை சரிபார்த்த பிறகே தான் இதைக்கூறுவதாகவும் அன்றைய தினத்தில் ஷுபம் திவேதி என்ற பெயரில் ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஷுபம் காட்டும் மருத்துவ பதிவுச் சீட்டு போலியானது என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். அது புறநோயாளிகளுக்கான சீட்டு அதனை அனுமதித்ததற்கான ஆதாரமாகக் காட்ட முடியாது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பாலியல் பலாத்காரப் பெண்ணுக்கு தீவைத்ததற்காக கைது செய்யப்பட்ட 5 நபர்களில் ஷிவம் திவேதியின் தந்தையான் ஹரி சங்கர் என்பவரும் ஒருவர். அவர் மருத்துவச் சீட்டை அலிபியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதாவது ஷுபம் பெயரை எஃப்.ஐ.ஆர்.லிருந்து நீக்க வேண்டும் என்பது இவரது கோரிக்கை.

இதனையடுத்து போலீஸார் அந்த மருத்துவமனையில் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் விசாரணை அதிகாரிகளிடம் தாங்கள் உண்மையைக் கூறுவோம் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மரண வாக்குமூலம் வலுவாக இருப்பதாகக் கூறிய உ.பி.மாநில தலைமைக் காவலதிகாரி ஓ.பி.சிங், “இறப்பதற்கு முன்பாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சப்-டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் கொடுத்த வாக்குமூலத்தில் இந்த 5 நபர்கள்தான் தன்னைத் தாக்கினர்” என்று கூறியுள்ளார். இவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம். விரைவில் இந்த ஒட்டுமொத்த வழக்கிலும் நீதி கிடைக்க பாடுபடுவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x