எந்த வரலாற்று புத்தகத்தை படித்து சொல்கிறீர்கள்? - மாநிலங்களவையில் அமித் ஷாவுக்கு கபில் சிபல் சரமாரி கேள்வி

எந்த வரலாற்று புத்தகத்தை படித்து சொல்கிறீர்கள்? - மாநிலங்களவையில் அமித் ஷாவுக்கு கபில் சிபல் சரமாரி கேள்வி
Updated on
1 min read

எந்த வரலாற்று புத்தகத்தை படித்து அமித் ஷா இருநாடு கொள்கை கூறுகிறார் எனத் தெரியவில்லை என காங்கிரஸ் எம்.பி. கபில் சிபல் கூறினார்.

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்தநிலையில் குடியுரிமை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. குடியுரிமை மசோதா மீதான விவாத்தின்போது காங்கிரஸ் எம்.பி. கபில் சிபல் பேசியதாவது:

‘‘இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுதந்திரத்தின்போது இருநாடுகளாக இந்தியா பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் குடியுரிமை மசோதாவுக்கு தேவையில்லாமல் போயிருக்கும் எனக் கூறினார்.

எந்த வரலாற்று புத்தகத்தை படித்து அமித் ஷா இதனை கூறுகிறார் எனத் தெரியவில்லை. இருநாடு கொள்கை என்பது எங்கள் கொள்கையல்ல. அது சவார்க்கரால் உருவாக்கப்பட்டது’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in