ஹைதராபாத் என்கவுன்ட்டரை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி விரைவில் நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்
Updated on
1 min read

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர், 4 பேர்கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் லாரி ஓட்டுநர் முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நான்கு பேரையும் விசாரணைக்காக கடந்த வாரம் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர்

அப்போது 4 பேரும் போலீஸாரின் துப்பாக்கியைப் பிடுங்கி தாக்க முயன்றபோது, போலீஸார் அவர்களை என்கவுன்ட்டர் செய்ததாகக் கூறப்பட்டது.

போலீஸாரின் இந்த என்கவுன்ட்டருக்கு பொதுமக்கள் தரப்பில் ஒருபுறம் மிகப்பெரிய ஆதரவும், மற்றொரு தரப்பில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. சட்டத்தை போலீஸார் கையில் எடுக்கக்கூடாது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று ஒருதரப்பினர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் என்கவுன்ட்டர் செய்த போலீஸார் மீது தனியாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, வழக்கறிஞர் பி.எல்.சர்மா, பிரதீப் சர்மா ஆகியோர் தனித்தனியாகப் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. தெலங்கானா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கிருஷ்ணகுமார் சிங் ஆகியோர் ஆஜரானார்கள்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே," இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நாங்கள் பரிசீலிக்கிறோம். உண்மை குறித்து அறிய இருக்கிறோம். ஆதலால், இந்த வழக்கை டெல்லியைச் சேர்ந்த உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று கருதுகிறோம். விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதியை அமர்த்தி விசாரணையைத் தொடங்கச் சொல்வோம்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in