காய்கறிகள் மீதான ஆய்வில் தவறு செய்ததாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு நோட்டீஸ்

காய்கறிகள் மீதான ஆய்வில் தவறு செய்ததாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு நோட்டீஸ்
Updated on
2 min read

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பயிராகும் காய்கறிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தவறான தகவல் வெளியிட்டதாக ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு இந்திய பயிர் பாதுகாப்பு கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

மேலும் தவறான தகவலுக்காக இந்த அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் உள்ளது.

நம் நாட்டின் மத்திய பல்கலைக் கழகங்களில் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றது. இதன் தாவரவி யல் துறை பேராசிரியர் பி.எஸ்.கிலாரே, அவரது மாணவி சப்னா சவுரஸியா மற்றும் உதவியாளர் தர்பா சவ்ரவ் ஜோதி ஆகியோர் கொண்ட குழு ஓர் ஆய்வு மேற்கொண்டது. இக்குழு டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் விளையும் காய்கறிகள் மீது ஆய்வு நடத்தி, அதன் ஆய்வறிக் கையை ’சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு’ என்ற பன்னாட்டு ஆய்வு இதழில் கடந்த நவம்பரில் வெளியிட்டது.

இதில், “20 முள்ளங்கி, 6 காலி பிளவர், 8 கத்தரிக்காய், 9 வெண்டைக் காய், 9 சுரைக்காய் ஆகியவற்றை பரிசோதனை செய்தபோது அதன் பயிர் களில் இந்தியாவில் தடை செய்யப் பட்ட 20 வகை பூச்சி மருந்துகள் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இந்த மருந்துகள் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள சந்தைகளில் வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு, “தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியக் கடைகளில் கிடைப்பதில்லை. அவை பயிர்களிலும் பயன்படுத்தப்படுவதில்லை” என்று இந்திய பயிர் பாதுகாப்பு கூட்டமைப்பு பதில் அளித்தது. மேலும் அந்த ஆய்வின் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் கூட் டமைப்பின் ஆலோசகர் எஸ்.கணேசன் கூறும்போது, “ஆய்வு என்ற பெயரில் ஒரு தவறு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தவறு நம் நாட்டில் நடப்பதாக உலக நாடுகளிடையேயும் பரப்ப முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் செய்த ஆய்வின் தொழில்நுட்ப பரிசோதனை அறிக்கையை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டோம்.

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப் பட்டுள்ளது எனக் கேட்டும் எதற்கும் பதில் தர மறுக்கிறார்கள். அவர்களிடம் மத்திய விவசாய ஆய்வு கவுன்சில் சார்பில் கேட்டபோதும் பதில் தரப்படவில்லை.

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து கள் விற்பனை மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் தனியாக ஓர் அமைப்பு இயங்குகிறது. இந்த ஆய்வுக் கட்டுரை வெளியான இதழின் ஆசிரியர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார். இணை ஆசிரியர் சீனாவில் உள்ளார். எனவே அந்தப் பேராசிரியர் பணியாற்றும் பல்கலைக்கழகத்தின் துணைவேந் தருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதற்கும் பதில் கிடைக்கவில்லை எனில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை அணுகுவோம்” என்றார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வேந்தரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் துக்கும் இக் கூட்டமைப்பின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் டெல்லி காய்கறிப் பயிர்கள் மீதான ஆய்வின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறும்போது, “எந்த வொரு கல்வி நிறுவனமும் தன்னிடம் பணியாற்றும் பேராசிரியர்களின் ஆய்வில் தலையிட முடியாது. ஆய்வை வேறு யாராவது காப்பி அடித்து வெளியிடுகிறார்களா என்பதை வேண்டுமானால் கண் காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதை தவிர மத்திய அரசு, பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணைவேந்தர் ஆகியோர் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. இதையே அவர்கள் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலாக அனுப்பப் பட்டுள்ளது” என்றனர்.

பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப் பாளர்கள் இணைந்து நடத்தும் அமைப்பே இந்திய பயிர் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in