Last Updated : 10 Dec, 2019 04:34 PM

 

Published : 10 Dec 2019 04:34 PM
Last Updated : 10 Dec 2019 04:34 PM

2000 ரூபாய் நோட்டு வாபஸா?; மீண்டும் ரூ1,000 நோட்டு அறிமுகமா? மத்திய அமைச்சர் விளக்கம்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.

மக்களவையில் இன்று சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி. விஷம்பர் பிரசாத் நிஷாத் பேசுகையில், " 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கறுப்புப்பணம் புழக்கம் அதிகரித்துள்ளது. ஆதலால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை விரைவில் வாபஸ் பெற்று, மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தகவல்கள் பரவுகிறது. இதுகுறித்து விளக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்

இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்து பேசியது:

" பணமதிப்பிழப்பு குறித்து இன்னும் மக்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. யாரும் கவலைப்படத் தேவையில்லை. மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை. அதேசமயம், சந்தையில் இருந்து பெறப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை

பணமதிப்பிழப்பின் நோக்கம் கறுப்புப்பணத்தை ஒழித்தல், கள்ள நோட்டை ஒழித்தல், தீவிரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுத்தல், முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், வழிசெலுத்துபவர்களை அதிகப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஊக்கமளித்தலாகும். இந்த நோக்கத்தை எட்டியிருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி நிலவரப்படி 17,74,100 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2019, டிசம்பர் 2-ம் தேதி நிலவரப்படி சந்தையில் 22,35,600 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் சந்தையில் புழக்கத்தில் உள்ளது.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி 2016-17-ம் ஆண்டில் 7,62,072 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2017-18-ம் ஆண்டில் 5,22,783 கள்ள நோட்டுகளும், 2018-19ம் ஆண்டில் 3,17,389 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையின் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கம் தடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டில் பரிமாற்ற அளவு 2,071 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிமாற்றம், 2018-19-ம் ஆண்டில் 3,134 கோடியாக அதிகரித்துள்ளது "
இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x