Published : 10 Dec 2019 04:06 PM
Last Updated : 10 Dec 2019 04:06 PM

குடியுரிமை மசோதா: பாகிஸ்தான் இந்து அகதிகள் டெல்லியில் கொண்டாட்டம்

மக்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில் இதனை பாகிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்து அகதிகளாக உள்ள தங்கியுள்ளவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்துள்ள இந்துக்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். டெல்லி, ஜோத்பூர் உட்பட வட மாநிலங்களில் அகதிகளாக தங்கியுள்ள அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கை ஆதரித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் அகதியான பிரேம்சந்த் கூறுகையில் ‘‘கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து இங்கே வந்தேன். இப்போது நான் எந்த நாட்டின் குடிமகனாகவும் இல்லை. எங்களுக்கு குடியுரிமை வழங்கும் முடிவு மகிழ்ச்சியை அளிக்கிறது’’ என்றார்.

அதுபோலவே யசோதா என்பவர் கூறுகையில் ‘‘மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்’’ எனக் கூறினார். மற்றொரு இந்து அகதி கூறுகையில் ‘‘6 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் முடிவு நியாயமானது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x