Last Updated : 10 Dec, 2019 04:00 PM

 

Published : 10 Dec 2019 04:00 PM
Last Updated : 10 Dec 2019 04:00 PM

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப்பலாத்காரத்தால் கொல்லப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவர் தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்

கடந்த 2012-ம் ஆண்டு, 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அவரின் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிங்கப்பூருக்கு மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் 2012, டிசம்பர் 29-ம் தேதி அந்த மாணவி உயிரிழந்தார்

மாணவியைப் பலாத்காரம் செய்த ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக் ஷய் குமார் சிங் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.‘நிர்பயா’ வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

கடந்த 2018-ம் ஆண்டு, ஜூலை 9-ம் தேதி இந்த 4 குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால், வழக்கில் 4-வது குற்றவாளியான அக் ஷய் குமார் சி்ங் மட்டும் சீராய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி அக்ஷய் குமார் சிங் சார்பில் இன்று அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் சீராய்வு மனுத் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே பல்வேறு சிறைகளில் இருந்த 4 குற்றவாளிகளையும் இன்று திஹார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விரைவில் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் அக்ஷய் குமார் சிங் மட்டும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x