Last Updated : 10 Dec, 2019 03:37 PM

 

Published : 10 Dec 2019 03:37 PM
Last Updated : 10 Dec 2019 03:37 PM

3 மாதத்துக்குள் ராமர் கோயில் கட்டுவதற்கான குழு அமைப்பது அரசின் கடமை: மத்திய அமைச்சர் உறுதி

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டுவதற்கான புதிய அறக்கட்டளையை அமைப்பது அரசின் கடமை என்று மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்

ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைக்கக் கூறிய அறக்கட்டளை குறித்த கேள்விக்கு மக்களவையில் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், " அயோத்தி நிலவிவகார வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த 3 மாதங்களுக்குள் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்கும். அது மத்திய அரசின் கடமை. அந்த அறக்கட்டளையில் இடம் பெற வேண்டிய அறங்காவலர்கள், அறக்கட்டளை செயல்படும் விதம், அறங்காவலர்கள் அதிகாரம், நிலத்தை அறக்கட்டளை வசம் ஒப்படைத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மத்திய அரசு விரைவில் செய்துவிடும்.

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை அமைப்பது மத்திய அரசின் கடமை " எனத் தெரிவித்தார்

ஜம்மு காஷ்மரீல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நடந்துள்ள ஊடுருவல்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கிஷன் ரெட்டி பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், " கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் 84 முறை ஊடுருவல்கள் முயற்சி நடந்துள்ளது. இதில் தீவிரவாதிகளும் ஊடுருவ முயன்றுள்ளார்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடனும் ஊடுருவல்கள் நடந்துள்ளன. இதில் 59 தீவிரவாதிகள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்.

இந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிவரை 22 ஆயிரத்து 557 தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள், தாக்குதல்கள் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், 42 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் " எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x