

பிரதமர் மோடியின் ஆட்சியில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் அச்சப்படக் கூடாது. குடியுரிமைத் திருத்த மசோதா அண்டை நாடுகளில் அடைக்கலம் வந்திருக்கும் சிறுபான்மை மக்களுக்கு நிச்சயம் பெரும் நிம்மதியைத் தரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்
குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் நேற்று நள்ளிரவு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா முஸ்லிம் மக்களுக்கு எதிரானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் குற்றம்சாட்டி பேசினர். இதனால் மக்களவையி் நேற்று காரசாரமான விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடியின் ஆட்சியில் எந்த மதத்தைச் சேர்ந்த மக்களும் அச்சப்படக் கூடாது. அண்டை நாடுகளில் இருந்து வந்து இங்கு அடைக்கலம் வந்துள்ள சிறுபான்மை மக்கள் இன்னும் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்குப் பெரிய நிம்மதியை இந்த குடியுரிமைத் திருத்த மசோதா அளிக்கும்.
அதுமட்டுமல்லாமல் நிச்சயம் மோடி அரசு தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நடைமுறைப்படுத்தும். அவ்வாறு நாடுமுழுவதும் குடியுரிமைப் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டில் சட்டவிரோதமாக ஒருவர் கூட தங்கி இருக்க முடியாது.
எதிர்க்கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கும், மூன்று அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி இங்கு வந்து மதரீதியான விசாரணையை எதிர்கொண்டு வரும் மக்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.
பிரதமர் மோடியின் ஆட்சியில் யாரும் துன்பப்படக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்படவில்லை என்றால் குடியுரிமைத் திருத்த மசோதா தேவையில்லை.
ஆனால் கடந்த 1951-ம் ஆண்டில் இந்தியாவில் 9.8 சதவீதம் இருந்த முஸ்லிம் எண்ணிக்கை 2011-ம் ஆண்டு 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்து மக்கள் தொகை கடந்த 1951-ம் ஆண்டில் 84சதவீதம் இருந்த நிலையில், 2011-ம் ஆண்டு 79 சதவீதமாகக் குறைந்துள்ளது
ஆனால், பாகிஸ்தானில் கடந்த 1947-ம் ஆண்டில் 23 சதவீதமாக இருந்த சிறுபான்மை மக்கள் தொகை 2011-ம் ஆண்டில் 3.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. வங்கதேசத்தில் 1947-ம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த சிறுபான்மை மக்கள் தொகை 2011-ம் ஆண்டில் 7 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், இந்தியா ஒருபோதும் மதரீதியாக மக்களை வேறுபாடு காட்டவில்லையே
ஆனால், குடியுரிமை திருத்த மசோதா சிறுபான்மை மக்களுக்கு அரசியலமைப்புச்சட்டப்படி மரியாதை வழங்கும், வலியுடன் விசாரணையைச் சந்தித்துவரும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும்.
இந்த மசோதா ஒருபோதும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவை மீறும் வகையில் இல்லை. இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் இல்லை. அதேசமயம், மியான்மரில் இருந்து வரும் ரோஹின்யா முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது.
இந்த மசோதா மதரீதியானது என்று எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொண்டு கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியுடனும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைத்துள்ளது. பிரதமர் மோடியின் அரசில் ஒரு மதம் மட்டுமே உண்டு. அது அரசியலமைப்புச்சட்டம் மட்டும்தான்
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்