Published : 09 Dec 2019 04:30 PM
Last Updated : 09 Dec 2019 04:30 PM

கர்நாடக இடைத்தேர்தல் முடிவு: பதவி விலகினார் சித்தராமையா 

பெங்களூரு

கர்நாடக சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலகினார்.

கர்நாடகாவில் காலியாகவுள்ள சிவாஜிநகர்,கே.ஆர்.புரம் உள்ளிட்ட‌ 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆகிய மூன்று கட்சிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. 15 தொகுதிகளிலும் பதிவான 66.49 சதவீத வாக்குகள் பதிவாகின.

கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தலைமையிலான பாஜகவுக்கு போதுமான ஆதரவு இல்லாததால் இந்த தேர்தலில் பாஜக‌ 6 முதல் 8 இடங்களில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் எடியூரப்பா ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருப்பதால், கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக 10 இடங்களில் வென்றுள்ளது. மேலும் 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஒரு தொகுதியில் சுயேச்சை ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலகினார்.

சித்தராமையா கூறியதாவது
‘‘ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். மக்கள் முடிவை ஏற்கிறேன். கர்நாடக சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பவுள்ளேன்’’ எனக் கூறினார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x