

இந்த நாட்டை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தியது காங்கிரஸ் தான், நாங்கள் அல்ல என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
பாஜக தலைமையில் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே அறிமுகமான மசோதாவில் வில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாக கருதப்படுவர். ஆனால் இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்தநிலையில் மக்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் பேசியதாவது:
மதத்தை கொண்டு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்படவில்லை. இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்பதை சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. அதன் காரணமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.
இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என காங்கிரஸ் கூறுவது வேடிக்கையாக உள்ளது. நாடு சுதந்திரமடைந்தபோது, மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தியது காங்கிரஸ் கட்சி தான்.
நாங்கள் அல்ல. மதத்தின் பெயரால் நாங்கள் நாட்டை பிளவுபடுத்துவதாக கூறப்படுவதில் 0001 சதவீதம் கூட உண்மையில்லை. சட்டத்தின்படியே இதனை செய்கிறோம்.’’ எனக் கூறினார்.