Published : 09 Dec 2019 01:31 PM
Last Updated : 09 Dec 2019 01:31 PM

தேவகவுடாவின் கோட்டையில் முதன்முறை வென்ற பாஜக: சொந்த ஊரில் வெற்றி கண்ட எடியூரப்பா

கர்நாடகாவில் கே.ஆர் பேட்டை எனப்படும் கிருஷ்ணராஜ பேட்டை தொகுதியில் பாஜக முதன்முறையாக வென்றுள்ளது. மாண்டிய மாவட்டத்தில் எடியூரப்பாவின் சொந்த ஊர் இடம் பெற்றுள்ள உள்ள இந்த தொகுதி மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.

கர்நாடகாவில் காலியாகவுள்ள சிவாஜிநகர்,கே.ஆர்.புரம் உள்ளிட்ட‌ 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆகிய மூன்று கட்சிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. 15 தொகுதிகளிலும் பதிவான 66.49 சதவீத வாக்குகள் பதிவாகின.

கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தலைமையிலான பாஜகவுக்கு போதுமான ஆதரவு இல்லாததால் இந்த தேர்தலில் பாஜக‌ 6 முதல் 8 இடங்களில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் எடியூரப்பா ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருப்பதால், கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. ஒரு தொகுதியில் சுயேச்சை முன்னிலை வகித்து வருகிறார்.

இதில் கே.ஆர் பேட்டை எனப்படும் கிருஷ்ணராஜ பேட்டை தொகுதியில் பாஜக முதன்முறையாக வென்றுள்ளது. மாண்டிய மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதி மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. தேவகவுடாவின் பாரம்பரிய தொகுதிகளில் ஒன்றாகும்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த தொகுதியில் தேவே கவுடானவின் நம்பிக்கைகுரிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய நாராயண கவுடா மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அவர் கட்சி மாறி பாஜகவுக்கு தாவி, குமாரசாமி அரசுக்கு எதிராக வாக்களித்து எம்எல்ஏ பதவியை இழந்தார். அதனால் அந்த தொகுதியில் தற்போது இடைத் தேர்தல் நடைபெற்றது. தற்போது அவர் பாஜக வேட்பாளராக அதே தொகுதியில் களமிறங்கினார். நாராயண கவுடா தேவ கவுடாவின் கழுத்தை நெறித்து விட்டதாகவும், அவர் துரோகி எனவும் கூறி இந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் பிரச்சாரம் செய்தது.

எனினும் தேர்தல் முடிவுகள் தற்போது பாஜகவுக்கு சாகமாக வந்துள்ளது. பாஜக வேட்பாளர் நாராயண கவுடா அங்கு முன்னிலை வகித்து வருகிறார்.

பாஜகவைச் சேர்ந்த முதல்வர் எடியூரப்பா பிறந்த ஊரான புங்கன்கரே இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் வெல்ல வேண்டும் என்பது எடியூரப்பாவின் நீண்டகால கனவு. இதனால் இந்த இடைத் தேர்தலில் எடியூரப்பாவின் மகன் உட்பட அவர்து குடும்பத்தினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

நீண்டகாலத்துக்கு பிறகு அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. எடியூரப்பாவின் சொந்த ஊரில் தாமரை மலர்ந்துள்ளது. இதனை குறிப்பிட்டு எடியூரப்பாவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x