

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அவருக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்த நிலையில் அந்தப் பெண் போலீஸில் புகார் அளித்தார். ஆனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து நீதிக்காகப் போராடிய அப்பெண் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் சிவம் கைது செய்யப்பட்டார். சுபம் திரிவேதி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் சிவமும் ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாதிக்கப்பட்ட இளம் பெண்னை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இதில் 90% காயம் அடைந்த அப்பெண் இதில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்தச் சம்பவம் தற்போது உத்தரப் பிரதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் குற்றவாளிகளுக்குத் தண்டணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “பாஜக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகப்பில்லை. உத்தரப் பிரதேச ஆளுநரும் பெண்தான். அவர் மற்றொரு பெண்ணின் வலியை உணர முடியும் என்று நம்புகிறேன். இந்த வழக்கில் உத்தரப் பிரதேசம் அக்கறை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆளுநரிடம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.