Last Updated : 07 Dec, 2019 11:01 AM

 

Published : 07 Dec 2019 11:01 AM
Last Updated : 07 Dec 2019 11:01 AM

உன்னாவோ இளம் பெண் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது; குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தரப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இளம் பெண் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றார்.

அதேபோல் அம்மாநில நீதித் துறை அமைச்சர் பிரஜேஷ் பத்தக், "உன்னாவோ இளம் பெண் இறந்த செய்தி வருத்தமளிக்கிறது. வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவு நீதிமன்றத்தில் அன்றாடம் வழக்கை நடத்தி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்" என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அவருக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துவந்த நிலையில் அந்தப் பெண் போலீஸில் புகார் அளித்தார். ஆனால் போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. தொடர்ந்து நீதிக்காகப் போராட்டிய அப்பெண் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸாரும் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த மார்ச் மாதம் சிவம் கைது செய்யப்பட்டார். சுபம் திரிவேதி தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் சிவமும் ஜாமீனில் வெளிவர தங்கள் மீது புகார் கொடுத்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாதிக்கப்பட்ட இளம் பெண் ரே பெரேலி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளார்.

அதனை ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்த சுபம், சிவம் உள்ளிட்ட 5 பேர் ரயில் நிலையம் செல்லும் வழியிலேயே அப்பெண்ணை தடுத்து நிறுத்தித் தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி அப்பெண்ணை எரிக்க முயன்றுள்ளனர்.

90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண் லக்னோ மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். அவரின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவம், சுபம் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x