சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தான் சுதந்திர காற்றை சுவாசித்தேன் : ப.சிதம்பரம்

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தான் சுதந்திர காற்றை சுவாசித்தேன் : ப.சிதம்பரம்
Updated on
1 min read

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தான் சுதந்திர காற்றை சுவாசித்தேன் என சிதம்பரம் கூறினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 106 நாட்களுக்குப் பிறகு அவர் நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார்.

ப.சிதம்பரம் திஹார் சிறையிலிருந்து நேற்று வெளியே வந்தார், காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில் விடுதலையான மறுநாளான இன்று நாடாளுமன்றம் வந்தார். வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர். சிதம்பரமும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து அவர் மாநிலங்களவைக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘நேற்று இரவு 8 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தான் சுதந்திரக் காற்றை சுவாசித்தேன். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அடிப்படை சுதந்திரத்தை இழந்து தவிக்கும் 75 லட்சம் மக்களுக்காக வேண்டுகிறேன்.

குறிப்பாக எந்தவித குற்றமும் செய்யாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறேன். சுதந்திரம் என்பது அவசியமானது. சுதந்திரத்தை நாம் காக்க வேண்டும், சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும்.

அமைச்சராக இருந்தபோது எனது நிலைப்பாடு தெளிவானது. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், கலந்துரையாடிய தொழிலதிபர்கள், என்னை கவனித்து வரும் பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் இது பற்றி தெரியும்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in