Last Updated : 05 Dec, 2019 08:22 AM

 

Published : 05 Dec 2019 08:22 AM
Last Updated : 05 Dec 2019 08:22 AM

106 நாட்களாக திஹார் சிறையில் இருந்தபோது கைதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய ப.சிதம்பரம்

டெல்லி திஹார் சிறையில் கடந்த 106 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் (74), சக கைதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 106 நாட்களுக்குப் பிறகு அவர் நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார். ஆசியாவின் மிகப்பெரிய திஹார் சிறைச்சாலையின் அறை எண் 7-ல் சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்தார். 10 அடி அகலம், 15 அடி நீளம் கொண்ட அந்த அறையில் மேற்கத்திய கழிவறை வசதி இருந்தது. இதில் அவருக்கு தலையணை, மெத்தை மற்றும் ஒரு தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டிருந்தது. பிறகு அவருக்கு இருந்த முதுகுவலி குறித்து உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இதன் பலனாக சிதம்பரம் அமர ஒரு நாற்காலியும், முதுகுக்கு முட்டு கொடுக்க கூடுதலாக ஒரு தலையணையும் கொடுக்கப்பட்டது. மற்ற கைதிகளை போல சிதம்பரத்துக்கும் சிறை வளாகத்தில் உள்ள பொது நூலகம் சென்று படிக்க அனுமதி இருந்தது. இதனால் பெரும்பாலான நேரங்களில் பல்வேறு நூல்கள், செய்தித்தாள்களை படிப்பதில் அவர் ஆர்வம் காட்டி உள்ளார்.

தொடக்கத்தில் சிதம்பரத்துக்கு மற்ற கைதிகளைப் போல வழக்கமான உணவுகள் வழங்கப்பட்டன. இதில் அவல், சாதம், பருப்பு, ரொட்டி, தயிர் மற்றும் காய்கறிகள் இடம் பெற்றிருந்தன. பிறகு அவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டி, வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் சிதம்பரம், தனது சக கைதிகளுடன் மிகவும் நட்புடன் பழகி வந்துள்ளார். மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பதவி வகித்ததால், சிதம்பரத்துடன் சிறை அதிகாரிகளும் பேசிப் பழகி வந்துள்ளனர்.

இதுகுறித்து திஹார் சிறைச்சாலை வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “மூத்த வழக்கறிஞர் என்பதால் சிதம்பரம், சக கைதிகள் மீதான வழக்கு விவரங்களை பொறுமையுடன் கேட்டறிந்து அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கினார். நாட்டின் அரசியல், பொருளாதார சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த சில சந்தேகங்களை சிறை அதிகாரிகள் அவரிடம் கேட்டறிந்தனர்” என்றனர்.

இதுபோன்ற சந்திப்புகளில், தான் கைது செய்யப்பட்டது குறித்து விரிவாக எடுத்துரைத்த சிதம்பரம், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக அவர்களிடம் வருந்தியுள்ளார். தனது சிறை நாட்களில் காலை, மாலை என இரு வேளையும் நடைபயிற்சி மேற்கொண்ட சிதம்பரத்தின் பாதுகாப்புக்காக 4 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். முக்கிய அரசியல் தலைவர் என்பதால் அவரது உடல்நிலையை சிறை மருத்துவர்கள் அடிக்கடி பரிசோதித்தனர். ஆனாலும் சிதம்பரத்தின் எடை வெகுவாகக் குறைந்துள்ளது.

சிறையின் அறையில் இருந்தபடி அன்றாடம் தனது டயரியில் பல்வேறு குறிப்புகளையும் சிதம்பரம் தொடர்ந்து எழுதி உள்ளார். இதைப் பார்த்து சிலர் அவரிடம் விடுதலைக்கு பின் நூல் எழுதுவீர்களா? எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது லேசான புன்னகையையே தனது பதிலாக அளித்துள்ளார் சிதம்பரம். எனவே, அவர் தனது சிறை அனுபவங்கள் குறித்து விரைவில் நூல் எழுதி வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x