

பாலியல் வழக்கில் சிக்கி இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, ஈகுவடார் நாட்டில் தனித்தீவை வாங்கி அதனை தனி நாடாகவும் அறிவித்துள்ளார்.
கடத்தல் புகாரின் கீழ் அகமதாபாத் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அங்குள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் போலீஸார் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நித்யானந்தா மீது கடத்தல் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, முன்னாள் பெண் பக்தர்கள் சிலர், அவர் மீது பாலியல் புகாரும் அளித்தனர். எனவே, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீஸார் நித்யானந்தாவை தேடி வந்தனர். இதனிடையே, தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் நித்யானந்தா தலைமறைவாக உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.
‘கைலாசா' தனி நாடு
இந்நிலையில், ஈகுவடாரில் ஒரு தனித் தீவினை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக நித்யானந்தா அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, நித்யானந்தாவால் உருவாக்கப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கும் வலைதளத்தில் நேற்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், ஈகுவடாரில் உள்ள ஒரு தீவானது ‘ரிபப்ளிக் ஆப் கைலாசா' என்ற இந்து நாடாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைகள் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் கைலாசாவுக்கென தனிக் கொடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் நித்யானந்தாவும், மறுபக்கத்தில் ரிஷப வாகனமும் கொண்டதாக அந்தக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
அலுவல் மொழி தமிழ்
இவை தவிர, அந்நாட்டின் தேசிய விலங்காக நந்தியும், தேசிய பறவையாக ஷரபமும் (சங்ககாலத்தில் இருந்ததாக அறியப்படும் ஒருவகை பறவை), தேசிய மலராக தாமரையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த வலைபக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகியவை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கைலாசா நாட்டுக்கு செல்ல தனி பாஸ்போர்ட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு அமைச்சரவையை அமைக்கும் பணிகளும், 10-க்கும் மேற்பட்ட துறைகளை உருவாக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் கூறுவது என்ன?
நித்யானந்தாவின் இந்த தனி நாடு அறிவிப்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, ஒரு தனித்தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக அறிவிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று என்றும், ஒரு பகுதியோ அல்லது இடமோ தனி நாடாக உருவாக வேண்டுமெனில் அதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.