Last Updated : 04 Dec, 2019 05:35 PM

 

Published : 04 Dec 2019 05:35 PM
Last Updated : 04 Dec 2019 05:35 PM

சூடான் செராமிக் தொழிற்சாலை வெடி விபத்தில் 18 இந்தியர்கள் பலி; இந்தியத் தூதரகம் தகவல்

சூடான் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைக்க முற்படும் மீட்புப் பணியாளர்கள்.

கார்ட்டூம்

சூடானில் ஒரு செராமிக் தொழிற்சாலையில் நடந்த எல்பிஜி டேங்கர் வெடித்ததில் 23 பேர் பலியாகினர். இதில் 18 பேர் இந்தியர்கள் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சூடான் தலைநகரான கார்ட்டூமில் பஹ்ரி பகுதியில் உள்ள சீலா பீங்கான் தொழிற்சாலையில் நடந்த எல்பிஜி டேங்கர் வெடித்ததில் 23 பேர் பலியானதாக சூடான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அவசரப் பயன்பாட்டிற்கு அங்கு வைக்கப்படவில்லை. முறையற்ற முறையில் எரியக்கூடிய பொருட்களும் இருந்தன. இது தீ பரவுவதற்கு வழிவகுத்ததது என்று சூடான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இக்கொடூர வெடி விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் பற்றி இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''சூடானில் ஒரு செராமிக் தொழிற்சாலையில் நடந்த எல்பிஜி டேங்கர் வெடித்த சம்பவத்திற்குப் பிறகு 16 இந்தியர்களைக் காணவில்லை. சமீபத்திய தகவல்கள்படி, 18 பேர் இறந்துவிட்டனர். இதனை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

காணாமல் போனவர்களில் சிலர் இறந்தவர்களின் பட்டியலில் இருக்கலாம். உடல்கள் எரிக்கப்படுவதால் அடையாளம் காண முடியாது என்பதால் நாங்கள் இன்னும் முழுமையான தகவல்களைப் பெற வேண்டியிருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, காணாமல் போன அல்லது இந்தத் துயரத்தில் இருந்து தப்பிய இந்தியர்களின் விரிவான பட்டியலை தூதரகம் இன்று வெளியிட்டது. அதன் தரவுகளின்படி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

உயிர் தப்பிய 34 இந்தியர்கள் சலூமி மண்பாண்டத் தொழிற்சாலை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x