Last Updated : 04 Dec, 2019 04:50 PM

 

Published : 04 Dec 2019 04:50 PM
Last Updated : 04 Dec 2019 04:50 PM

முறைகேடான பணி நியமனம்: உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் 82 அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மணிப்பூர் அரசு

மாநில பப்ளிக் சர்வீசஸ் தேர்வில் முறைகேடுகள் செய்து அரசுப் பணியில் நுழைந்த 82 அதிகாரிகள் மீதான வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மணிப்பூர் அரசு நிரந்தரப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இன்று அதற்கான அதிகாரபூர்வ ஆணையை வெளியிட்ட மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை (பணியாளர் பிரிவு) பிறப்பித்த உத்தரவில், ''உச்ச நீதிமன்றத்தின் (நவம்பர் 22-ம் தேதி) தீர்ப்பிற்கு இணங்க கடந்த 2017 ஏப்ரல் 18, அன்று வெளியிடப்பட்ட அவர்களின் நியமனக் கடிதங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குத் தொடர்ந்த பிரதான தேர்வில் தோல்வியடைந்த விண்ணப்பதாரர்களின் வழக்கறிஞர் புஷ்பா குருமாயும் கூறியதாவது:

கடந்த 2016-ல் நடத்தப்பட்ட மணிப்பூர் மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் மேற்கண்ட 82 பேர் கலந்துகொண்டு தேர்வாகி அரசுப் பணியில் இணைந்தனர். இதே தேர்வில் பங்கேற்று பிரதான தேர்வில் தோல்வியடைந்த விண்ணப்பதாரர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

இதனை அடுத்து உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க இரண்டு பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த விசாரணையில் 2016-ல் நடத்தப்பட்ட மணிப்பூர் மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு விடைத்தாள்கள் பரிசோதிக்கப்பட்டன. அதில் பணிக்குத் தேர்வானவர்களின் விடைத்தாள்கள் பெரும்பாலும் மதிப்பெண்களில் முறைகேடு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், இவற்றில் பரிசோதனையாளர்களின் கையொப்பம் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அக்டோபர் 18-ம் தேதி உயர் நீதிமன்றம் நியமன உத்தரவுகளை ரத்து செய்தது மட்டுமல்லாமல், மூன்று மாதங்களுக்குள் தேர்வை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் அதாவது தற்போது நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர், இம்பால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். ஆனால் அது நவம்பர் 22-ம் தேதி அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் முறைகேடான முறையில் பணி நியமனம் செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டதால் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மாநில அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது''.

இவ்வாறு விண்ணப்பதாரர்களின் வழக்கறிஞர் புஷ்பா குருமாய் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x